புதன், 14 ஏப்ரல், 2021

விதியின் விளையாட்டு

 விதியின் விளையாட்டில்

கொஞ்சம் கல்லானேன்,

காலமெனும் உளியால்-எனை

நானே செதுக்குகிறேன்...!


சிலையோ பழங்கலையோ

காத்திருக்கிறேன் நான்,

சிலையாய் உயிரடைவேனா-பழங்

கலையாய் அழிக்கப்படுவேனா...!


பொய்யான உலகமிது

கூடிநின்னு கும்மியடிக்குது,

கைகளைத் கட்டி வைத்து

செதுக்கிப் பார் என்கிறது...!


இது கேடுகெட்ட உலகமடா

உள்ளத்தில் பெரிய கலகமடா

துணிவு கொஞ்சம் இருக்குதடா

தூக்கியெறிந்தே போவேனடா...


விழிகளில் தேங்கிடும் நீரோ

வலிகளைத் தாங்கி நிற்கிறது...!

அது விழுந்தால் அன்றைக்கு

பூவின் காம்பிலும் பூகம்பமே...!


என் இதயத்தை பாறையென்று

உடைத்து விளையாடும் உறவுகளே...

உளி உடைந்தாலுமென் விரல்

நுனியும் எனக்கு உளியாகும்...!


எனக்கென்ற அடையாளம்

அது அழிக்கப்படும் அபாயம்,

போராடுவேன் உயிர் வாழ

நிச்சயமாய் போராடுவேன்...


ஒரு நாள் நீ பார்க்கும்படியே

எனைச் செதுக்கி வைப்பேன்,

இது நிச்சயம் நடக்கும்-பார்

இப்போது என்னைத் தூற்று...!


சிலந்தி வலையில் சிக்கியச்

சின்னப் பூச்சி போலதான்

புறம்பேசும் உன் வாயிலே

சிக்கித் தவித்துக் கொண்டேன்...


வலையென்ன உன் வாய்ச்

சொல்லையும் அறுத்தெறிந்து 

ஒருநாள் விடுதலையாவேன்-நான்

வளர நீயுமெனக்குத் தேவைதான்...



-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்


செவ்வாய், 13 ஏப்ரல், 2021

அதிசயமும் அற்புதமும்

அதிசயமும் அற்புதமும்


மோகன மௌனம்,

ஊமை சிரிப்பு,

ஊர்வலம் போகும்

ஒற்றை நிலவு...

அவள்தான் அதிசயமாய்

ஆர்ப்பரிக்கும் அதிசய

மலரும் அவளேதான்...

ஒற்றைக் காலில் அல்ல

இரட்டைக் காலில் நடமாடும்

அற்புத மலரும் அவளேதான்...!




-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்

செவ்வாய், 6 ஏப்ரல், 2021

கல்லறைக்குள்

 கல்லறைக்குள்


பெண்ணே...

என் கல்லறையை

நீ பார்க்க நேர்ந்தால்...

எனது சின்ன ஆசையை

ஒரு முறை நிறைவேற்றிவிடு,


நாம் காதலித்த 

அத்தனை நாட்களின்

நினைவுகளையும் 

என் நெஞ்சோரமாய்

உன் கண்ணீரில் நனைத்து விடு,


கல்லறைக்குள் 

பூமியின் உஷ்ணம்

என் இதயத்தை வேக

வைத்துக் கொண்டிருக்கிறது!


உன் கண்ணீரால்

குளிர வைத்து விடு...

வேகும்பொழுதும் உன் கண்ணீரில்

குளிர்ந்து கொண்டிருப்பேன்...



-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்