காதலின் அறிகுறி
மின்சாரப் பார்வையினை
விழிகளால் வீசிப்போகிறாள்...
மானிடப்பிறவி நான்தான்
ரத்தமுறைந்து போகிறேன்...
கண்ணோரம் காதல்வந்து
இதயத்தை தாக்கியது,
இடியும் மின்னலுமாய்-எனை
பிரித்து மேய்ந்து போனது...!
காதல்வந்த அறிகுறியோ
கள்ளச்சிரிப்பில் தெரிகிறது,
கழுத்தெலும்பு சுழுக்கியும்,
கைவிரல்கள் எழுதுகிறது...
நியூட்டன் கண்டது
புவியீர்பு விசையை,
இக்கிறுக்கன் கண்டதோ
அவளீர்ப்பு விசையை...!
பித்தம் தலைக்கேறி
கிறுக்குபோல பிடிக்குது,
கடைத்தெரு சென்றாலும்-ஊரே
பார்ப்பது போலாகிறது...!
என்னென்னவோ எழுதி
கவிதைப்பந்து செய்கிறேன்,
அவ்வப்போது பிரித்து-அதை
படித்து நானே சிரிக்கிறேன்...!
பாதகத்தி வந்தென்னை
பேய்போல பிடிக்கிறாள்,
மந்திரிச்ச கோழியாய்
மசமசன்னு இருக்கிறேன்...!
பசிதாகம் இல்லாமலே
பட்டினிதான் கிடக்கிறேன்,
காதலிங்கு வந்ததால்
கலகலப்பை இழக்கிறேன்...
பேருந்தின் ஜன்னலோரம்
யார்யாரோ இருக்க,
பாவையவளையே எந்தன்
பார்வைகள் தேடுகிறது...!
கொரோனாவின் காலாவதி
பதினான்கு நாட்களாம்,
இக்காதல் காய்ச்சலுக்கோ
காலாவதியே இல்லையாம்...!
தேவதை அவளையே-காதல்
தேவையோடு நெருங்கினேன்,
தேவை இல்லையென்று-எனை
தேய்பிறையாய் தேயவிட்டாள்...!
திட்டி தீர்த்துவிட்டாள்
தித்திப்பாய் இருந்தது,
காதல் வந்தபின்னால்
இப்படிதான் இருக்குமாம்...?
நானோ ஆறாம்
விரலை புகைக்கிறேன்
அவளது ஐவிரல்களோ-என்
கன்னங்களை எச்சரிக்குது...!
அவளுக்கும் காதல்
வந்த அறிகுறியென்று,
அவளது அறையே-என்
காதோரமாய் சொன்னது...
சொரணைகெட்ட காதலும்
சொர்க்கமாக தெரிகிறது,
சொன்னால்தான் காதலா...?
புரிந்துகொண்டாலும் காதலே...!
அருமை கவியே ...
பதிலளிநீக்குநன்றி கவியே...!!
நீக்கு